"வெல்டன் தனுஷ்" இந்த வார்த்தை மட்டும் பாராட்டுவதற்கு போதுமானதாக இருக்கவே முடியாது.கட்டியணைத்து முத்தமிட்டு உச்சி நுகர நினைத்தால், உச்சி நுகரவே முடியாத உயரத்தில் அமிதாப் நிற்கிறார்.இருவரையும் தவிர்த்து படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்ட நினைத்தால் 1000 படங்களுக்கு இசையமைத்து,"எப்பவும் நான் ராஜா" வென நிற்கிறார் நம் இளையராஜா. ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமோ காட்சிக்கு காட்சி அழகியலை நேர்த்தியாக வார்த்து,கோர்த்து இது என்சினிமா என்பது போலொரு முனைப்பை கேமிராவில் செதுக்கியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் "ஒருபடி மேல் நான் தான்" என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பால்கி. கிரியேட்டிவ் இயக்குநருக்கு கூடவே பிறந்த பிறப்பு போல. கைதட்டல்கள்தான் கலைக்கும்,கலைஞர்களுக்குமான வெகுமதி. அதற்காக கைகள் சிவக்கும் அளவா கைதட்டல்கள் வாங்குவது? வாங்கிவிட்டதே "ஷமிதாப்"!! இது legends சினிமா. இந்த legends வரிசையில் நடிப்பின் அனுபவ முதிர்வை முன்வைத்து தனக்கான இடத்தை தக்க வைத்திருக்கிறார் தனுஷ். இனி இந்திய சினிமா இவருக்கு இனிமா கொடுக்க வாய்ப்பே இல்லை.. நிறைய அசாத்தியங்கள் ஷமிதாப்பில் சாத்தியங்களாகியிருக்கின்றன அதில் சில... 1. திரைக்கு முன்னால் மட்டும் தான் தனுஷ், அமிதாப் இருவரின் ஈகோ. திரைக்கு பின்னால் அப்படி ஒன்றும் இல்லை என்பது போல நிறைய காட்சிகள். தனுஷிடம் அமிதாப் அடிவாங்குவதோடு நின்றுவிடாமல் வோறொரு காட்சியில் அவரோடு கட்டி உருண்டு புரண்டு சண்டையிடும் அளவு இறங்கி அ(ந)டித்திருப்பது ஆஸம். எந்த காட்சியிலும் தன்னுடைய உச்ச நட்சத்திர அடையாளங்களை பிரதிபலிக்காத விதம் அருமை.. ( இந்த அர்ப்பணிப்புதான் அமிதாப்பை இன்றும் உச்சத்தில் வைத்திருக்கிறது.. )சூப்பர்ஸ்டார் ஷமிதாப்பாக தனுஷின் அறிமுகம் அமர்க்களம் என்றால் ப்ளாஷ்பேக்கில் ,போதையில் சருகுகளில் விழுந்து கிடக்கும் பிரக்ஞையற்ற அறிமுகத்தில் அமிதாப் ஜி அட்டகாசம் ஜி. "மனம்" தெலுங்கு படத்தில் டாக்டர் பிரதாப் கதாபாத்திரத்தில் சில நிமிடங்களில் கடந்து போகும் துணைநடிகராக அசத்திய அசாத்திய துணிவு அமிதாப்பிற்கு மட்டுமே சாத்தியம்.. 2) ராஜ்குமார் ஹிரானி,அனுராக் பாசு, போனிகபூர்,ரேகா,ருக்மணி ,அபிநயா என போகிறபோக்கில் பிரபலங்கள் வந்துசெல்வது..மிரளவைத்த சாத்தியம்.. முதல் தர திரையரங்கம், முதல் வகுப்பு ரசிகர்கள்.. வாவ், மார்வ்லெஸ்,ஆஸம், என பாராட்டுகள் அப்லாஸ்கள்..தரைலோக்கல் அளவிற்கு இறங்கி விசிலடிக்க நினைத்து அடக்கி ரசித்த காட்சிகள் பல.. வகுப்பாசிரியர் முன் நடித்துக்காட்டும் சிறுவனின் நடிப்பிற்கும்,அந்த காட்சிக்கான பி(மு)ன்னணி இசைக்கும் முதல் விசில்.. தனுஷின் சைகை மொழி புரியாமல் அமிதாப் "சப்டைட்டில் சப்டைட்டில்"என அக்ஷராவிடம் கேட்கும் போதும், இந்த பையனுக்கும் சேர்த்து 3 டீ கொண்டுவரச்சொல்லி அக்ஷராவின் தோற்றத்தை கலாய்க்கும் போதும் , நீ எடுக்க போகும் படமாவது கலரா இருக்குமா? இல்ல அதுவும் கறுப்பாதான் இருக்குமா?எனஅக்ஷராவின் பேவரிட் கலர் பற்றிய கமென்ட்டை சிரிக்காமல் சிக்ஸர் அடித்த போதும் நிறுத்தமால் விசிலடித்திருக்க வேண்டும்.. தனுஷை புதைத்த இடத்தில் குரலை இழந்த அமிதாப் உடைந்து அழுவதும், அதே இடத்தில் பேசி பயிற்சி எடுப்பதுமாக படம் முடியும் தருணத்தில் மொத்த பார்வையாளர்களும் மனதிற்குள்ளேயே விசிலடித்திருக்க வேண்டும்.. (படம் முடிந்த பிறகு எழுத்துகள் ஓட அதன் பின் வரும் இசை............ சொல்ல முடியாத உணர்வுக்குள் தள்ளி விடுகிறது) காட்சி முடிந்து, திரையரங்கின் வெண்திரை பார்த்து வெளிவரும் வேளையில், " whisky is rare, baani is every where" என்று போதை ஏறிய அமிதாப்பின் குரல்,நம்மை பின் தொடர்வது போலொரு மாயை மனதின் பரப்பில் ஆழச்சூழ்ந்து விடுவது சாத்தியமான உண்மை!! எல்லாம் சரிதான்.. இந்த படத்தில் ஒரு குறைகூட இல்லையா என்ற கேள்வி எழும்தானே?? குறைகள் கண்டுபிடிப்பதற்கான இடத்தை ஷமிதாப் கொடுக்கவில்லை என்பது சிறந்த பதிலாக இருக்கும் தானே? சில கேள்விகளுக்கு மாற்று கேள்விதான் மாறாத நல்ல பதில்.!!. பாலா..
பாலாவின் பக்கங்கள்
எளிமையான வாழ்வியலின் பயணத்தில் அன்பின் விரல் பிடித்து நடக்கும் சாதாரணனின் பதிவுகள்
திங்கள், 9 பிப்ரவரி, 2015
வியாழன், 21 ஆகஸ்ட், 2014
நில்.. கவனி.. செல்லாதே!!
வாகன நெரிசல்களினூடே வலமிருந்து இடமாக பிரதான
சாலையைக் கடக்கும் குறுகிய
நேரத்திற்குள் காலம் காலாவதி
ஆகிவிடுமென அலுத்துக்கொண்டே கடக்க யத்தனிக்கிறார்கள் சிலர்..
அவசர அவசரமாக கைகளை நீட்டியபடி சாலையின் நெரிசலுக்குள் திட்டுகளுக்கு செவி மடுக்காமல் கடந்தும் விடுகிறார்கள் சிலர்..
அமைதியாக முதுமையின் பிரதான நிதானமாய் காத்துமிருக்கிறார்கள் சிலர்..
சாலையைக்கடக்கும் அவசரத்தில்
அலைபேசியைத் தவறவிட்டு,தவறாமல் எடுத்தும் சென்று விடுகிறார்கள் சிலர்..
சிலர்களில் ஒருவனாய் நானும்,திட்டுவாங்கியபடியோ,தவறவிட்டபடியோ கூட்டத்தோடு
கூட்டமாய்க் கடந்து கொண்டிருப்பேன்,குறுங்கணப் பொழுதில் யாசகம் கேட்ட குழந்தையின் பசி நிறைந்த கண்களை கண்டு கொள்ளாமல்..
நின்று கவனித்து யாசகமிடாமல் கடந்த சாலையில் அக்குழந்தையின் ஏக்கக் கரங்கள் எழுதியிருக்கும் வலமிருந்து இடமாக இடம் பெயர்ந்த மனிதம்
மறந்த சதைப்பிண்டங்களின் மரண விதிகளை..!!
-- பாலா .
செவ்வாய், 1 ஜூலை, 2014
ஆமென்..
ஞாயிறு, 1 ஜூன், 2014
இசையாலணையும் பெயர்..
செவ்வாய், 15 ஏப்ரல், 2014
பிரிதலும்,பிரிதலின் நிமித்தமும்..
நகராட்சி உயர்நிலைப்பள்ளி
பத்தாம் வகுப்பு 'ஈ'பிரிவில்
முதல் வரிசையில் மூன்றாவது
ஆளாக அமர்ந்திருந்த குணக்கொடிக்கு..
அன்புள்ளவென எழுதத்தெம்பில்லாத அன்பனின்
முதல் கடிதம்.
அரசஇலைகள் சலசலக்கும்
வசந்தகாலமொன்றின் காலையில்
வட்டக்குளத் தாமரை மொட்டாக
சிரம் தாழ்த்தி பள்ளியேகி , பசித்த
வயிறுடன் சுதிசேராமல் கடவுள்
வாழ்த்துப்பாடி,தோழிகளோடு
ஓயாது சிரித்த நாட்களில்
வகுப்பறையெங்கும் சங்கீதச்
சிதறல்களாய் நிறைந்திருந்தாய்..
நீலம் பூத்த வெள்ளைத் தாவணியின் நுனிக்கசங்கலில்
முகம் துடைத்து ஒப்பனையற்று
உருப்பெறும் அன்றைய உனதழகு..
குட்டிச்சுவர் இளவட்டங்களின்
சலவட்டத்தனங்களை நெற்றிக்கண்
திறவாமல் சுட்டெரித்து அகலும்
தீர்க்கப்பார்வையில் பாரதி வழித்
தோன்றலாய் தினவுடன்
நீ நடைபோட்ட நாட்களை மறக்க
முடியுமா??
இடையதிரா நடையசைவில் சாமியாடும் உன் சடையாரத்தின்
பின் பித்தனாய் அலைந்த பத்து பேரில் நானும் ஒருவன்..
பள்ளி முடிந்த மாலை வேளையொன்றில், நேசமாகப்
புன்னகையித்து கைக்குட்டைக்குள் மறைத்து
வைத்திருந்த ஆரஞ்சு மிட்டாயை
என்னிடம் நீட்டி முயல்பாய்ச்சலாய்
நீ நகர்ந்த அந்த நாளின் தித்திப்பு
இன்றும் நாவிடுக்கில் தேனூட்டியபடி..
வறுமைக்கு வாக்கப்பட்ட நாளொன்றில், கணக்கு வாத்தியாரின் பிரம்படிக்குச்
சிறுமைப்பட்டு சிவந்த உள்ளங்கை
நிறத்தைக் கன்னப்பரப்பில் நாணமாக
நிரப்பி,தூரத்து உறவுக்காரன் விரல்
பிடித்து மேளம் முழங்க இல்லற
வாழ்வில் எட்டுவைத்து நீ மறைந்த
சேதியினை அம்பலப்படுத்தியது
அன்றைய தென்வடல் சூரைக்காற்று..
முன் நெற்றி முடியுதிர்ந்து,தாடையருகே நரை பிறந்த
என் இளமையின் இறுதியில்
பாலையத்து மாலையம்மன்
கோவில் திருவிழா விளக்கொளியில்
காணக்கிடைத்ததுன் முகம்..அன்று
பார்த்த அதே முகம்.. இன்று பச்சயமிழந்த
பயிர் போல உயிரற்று வாடி வதங்கியபடி..
கையிலொன்றும்,இடுப்பிலொன்றுமாக இரண்டு பிள்ளைகளின் தாயான நீ இன்னும்
சிறுபிள்ளைதான்..
"வெறுஞ்சிறுக்கி மவளே, வளவிக்கடையக் கண்டா, ஒங்காலடியில வேர் மொளச்சிருமே" விரல் பிடித்துகூட்டிப்போன உன் உறவுக்காரன் வசவுகேட்டு,
எசக்கத்து நீ நடந்த பாதையில்
புரண்டெழும் புழுதியில் தோன்றி
மறையுதடி வாழ்ந்து கெட்ட உன் வாழ்வின் மரண வலி..
அடியே குணக்கொடி.. உன்னிடம் கொடுக்கப்படாத என் கடிதத்தில் அந்துப்பூச்சிகள் அரித்தது போக எஞ்சியிருந்த
வார்த்தைகளில் இன்றும் கன்னிகழியாமல் நிற்கிறது
என் முதல் காதலும்,முதல் பிரிவும்!!
- பாலா.
(* சல வட்டத்தனம் - இளைஞர்களின்
குறும்பான கேலிப்பேச்சின் வட்டார
வழக்குச்சொல், எசக்கத்து - ஜீவனிழந்த நிலையின் வட்டார வழக்குச்சொல்.)
வியாழன், 16 ஜனவரி, 2014
ம்..
" I hate u " கார்த்திகாவிடமிருந்து
SmS. பதறாமல் ஆசுவாசமாக அவளுக்கு கால் செய்தேன். 5வது
முறையாக அழைத்தபோது "ம்ம் சொல்லுங்க சார், இன்னும் என்ன மறக்காம இருக்கீங்க போல?!" கேள்வியும்,கேலியுமாய் ஒரு பதில். இப்ப என்ன ஆச்சு? I hate u னு sms அனுப்பியிருக்க? என அவளிடம் கடிந்தகுரலில் பதிலுக்கு கேள்விகளை நான் அடுக்க எதிர் முனையில் அவளின் விசும்பல்...
சில நொடிகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டது !!
" இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா' தெருமுனை டீக்கடை ஸ்பீக்கரில் பாடல் அலறியபோது எனக்குள்
சிரித்தபடி நகர்ந்தேன்.ஆணிகள் அழைத்த காரணத்தால்!!
"வழக்கம் போல இன்னிக்கும் லேட்டாகிருச்சு. என்ன காரணம் சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிற தொணியில் கழுவி ஊத்த ஆயத்தமாக இருக்கும் டீம்லீடர எப்படி சமாளிக்கப்போறேனோ?
தெரியல.குலசாமிமேல பாரத்தப்
போட்டுரலாம் "னு எனக்குள்ளே
பேசிமுடிவெடுத்து கேபினுக்குள்
நுழைய முற்பட்ட போது," என்ன மா கண்ணா, லோ பேட்டரியான செல் மாதிரி மூஞ்சி டல்லா இருக்கு? எனி ப்ராப்ளம்? என மலர்விழி நக்கல் கலந்து விசாரிக்க
"ம்ம்ம். " என்றேன். சிரித்தவாறே
போ மகனே, நாட்டாமை உன்ன தான் தேடிட்டுருக்கார்னு சொல்லி
சிரிப்பைத்தொடர்ந்தாள் சிரிப்பழகி
மலர்விழி..
வெயிட்,வெயிட் நீயாரு? மலர்விழியாரு? கார்த்திகா யாரு?
என்ன சொல்ல வர்ற? னு கேட்பீங்க
தானே?..
என் பேரு கண்ணன். சங்கத்தமிழை சங்கறுத்த தமிழ் மண்ணின் மைந்தன்.(அட நம்ம மதுரைங்க) பொழப்புக்காக நல்லவன்
வேஷம் கட்ட வந்த இடம் சென்னை. பேஸிக்கலி
நான் ரொம்ப நல்லவன். நல்ல வேளையா இப்போ என் பக்கத்துல மலர்விழி இல்ல. இல்லாங்காட்டினா நான் நல்லவன் னு சொன்ன அடுத்த நிமிஷமே துப்பியிருப்பா.. திருவள்ளுவர் கூட
ஒரே ஒரு குறள்ல தான் அதிகமா துப்பியிருக்காரு. இவ என்னைய துப்பாத நாளே கிடையாது.ஆனாலும் அவகிட்ட இதுவரை கோபப்பட்டதில்ல. ரொம்ப திறமையானவ, அன்பானவ, என்னவிட ரொம்ம்ம்பப நல்லவ..
மலர்விழி பத்தி சிம்பிளா சொல்லனும்னா அவ சத்யராஜ்
மாதிரி. அவ கேரக்டர புரிஞ்சிக்கவே
முடியாது,வில்லத்தனமான ஹீரோயிசம் தான் அவளோட ஸ்டைல். கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும் னு சொல்லுவாய்ங்க. அந்த வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவள். என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிற முதல் பொண்ணும் இவ தான். எல்லோரும் அவகிட்ட உண்மையா நடந்துக்கனும் னு நினைப்பா.. இதுதான் அவளோட ப்ளஸ், மைனஸூம் அதேதான்..
கார்த்திகாவை பத்தி தலைவன் டிஆர் ஸ்டைல்ல சொல்லிறலாம்
'அவ ஈபிள் டவரு, நானோ குட்டிச்சுவரு!'100% பெர்பெக்ட்டா இருக்கனும் னு நினைக்கிற கேரக்டர். 1% கூட பெர்பெக்டா இருக்க முடியாத கேரக்டர் நான்.
இதுபோதாதா? லவ் ஆகிருச்சு.ஒரே ஆபீஸ்ல வேற வேற டீம்ல ஒர்க் பண்ற எங்களுக்குள்ள தினமும் சண்டைதான். ஆனாலும் இதுவரை ஈகோ ப்ராப்ளம் வந்ததில்ல. இன்னைக்குதான் முதன்முதலா அவகிட்ட கோபமா பேசிஇருக்கேன்!!
லன்ஞ்ச் டைம்ல அவளா என்கிட்ட பேசிடுவா என்ற தைரியத்தில் வேலைகளைத்தொடர்ந்தேன்.. லன்ச் டைம் தாண்டியும் இருவரும்
பேசிக்கொள்ளவில்லை மனசு உறுத்துவது போலொரு பிரம்மை .
சலனத்தோடுநிமிடங்களை நகர்த்திக்கொண்டிருந்தேன்..
என்ன பிரச்சினை டா? நான் அவகிட்ட பேசி பார்க்கவா? மலர்விழி என்னிடம் வந்து கேட்ட போது சந்தோஷமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக்காம "நீசகுனியோட லேடி வெர்ஷனாச்சே அதான் கொஞ்சம் பயமா இருக்கு"வென கலாய்த்த போது கொடூரமா ஒருலுக் விட்டு
வழக்கம் போல துப்பிட்டு,கார்த்திகா
இருக்கும் கேபினுக்குள் நுழைந்தாள்.
அவளோ அனுஉலை,இவளோ எரிமலை, நடுவுல சிக்கின என் நிலை? னு என் புத்திக்குள்ள டிஆர் டன்டனக்கா மியூசிக் போட்டாப்ல.
உடனே மலர்விழிக்கு sms அனுப்பினேன்,"தாயே,என் லவ்க்கு சங்கு ஊதிடாத"னு;"ச்சே..உனக்கெல்லாம் அப்டி பண்ணுவேனா? நண்பேன்டா நீ" என எகத்தாளமாய் பதில் அனுப்பினது அந்த பக்கி. இருந்தாலும் பயம் லைட்டா என்னையே சுத்திட்டு இருந்திச்சு.
" இப்போ கால் பண்றேன்,அவகிட்ட நான் பேசுறத நீ கேட்டுத்தொலை,
பழகின பாவத்துக்கு என்ன வேலைலாம் பாக்க வேண்டியிருக்கு கெரகம்டா" என மலரிடமிருந்து sms. "கடவுள் இருக்கான்டா கண்ணா " என எனக்குள் சொல்லியபடி அவர்களது உரையாடலை நேரலையில் கேட்க ஆயத்தமானேன்
(பன்றதெல்லாம் மொள்ள மாரித்தனம்,இதுல உரையாடல்,நேரலை னு தமிழ் பண்டிட் மாதிரி சீன் ஒரு கேடா? இது self த்தூ ,
"என்ன கார்த்தி உனக்கும் கண்ணனுக்கும்,மேரேஜ் னு கேள்விப்பட்டேன் உண்மையா செல்லம்? " மலரின் கேள்வியில்
கடுப்பாகி"அதெப்டி அவனோட
ப்ரண்ட்ஸ் எல்லோரும் அகராதியாவே பேசறீங்க? கார்த்திகா கொதிக்கத்தொடங்கினாள்
"அடிப்பாவி ஆரம்பத்திலேயே ஆட்டம் பாம் வெக்கிறீயே? " இது என்னோட மைன்ட் வாய்ஸ்.
cool cool நான் நேரா விஷயத்துக்கு வர்றேன்," அவனுக்கும்,உனக்கும் என்ன ப்ராப்ளம்? அவன் மூஞ்சிய பாரு, இவ்ளோ டல்லா இருந்ததே இல்ல,பேசி சால்வ் பண்ண முடியாத ப்ராப்ளம் னு ஒன்னும் இல்ல மா புரிஞ்சுக்கோ" வென தன்மையான குரலில் மலர் பேசினாள்," புரிதல் இருக்குமா;அவன் கிட்ட நேத்து ஈவினிங் பேசறப்போ நாம சேரமுடியாம போனா என்ன பண்ணுவ?" னு கேட்டேன் , உடனே யோசிக்காம வேற பொண்ண கரெக்ட் பண்ணிட்டு போய்டுவேன் னு சிரிக்கிறான், அப்போ என் மேல உண்மையான லவ் இல்ல னு தானே அர்த்தம்? கேள்வி கலந்த குரலில் விசும்பினாள் கார்த்திகா.!!
" அட லூசு இதெல்லாம் ஒரு ப்ராப்ளமா? அவன் ப்ராக்டிக்கலான விசயத்த சொல்லிருக்கான், காதலிக்கிறவரை புத்தியா இருந்திட்டு இப்போ இப்டி தத்தியா நிக்கிறீயே கார்த்தி,"ஒன்னு மட்டும்
தெளிவா புரிஞ்சிக்கோ, பொண்ணுங்க அளவு பசங்களால
பெர்பெக்ட்டா இருக்க முடியாது,
அதுபிறவிக்கோளாறு."பொதுவா
நம்மகிட்ட க்ளோஸா பழகுற பசங்க மேல ஒரு வித டவுட் வந்துட்டே இருக்கும்,எப்போ ப்ரொப்போஸ் பண்ணிடுவாங்களோ?னு பட் இவன் என் கிட்ட பழகத்தொடங்கி
பல வருஷமாச்சு,ஒருமுறைகூட
டவுட் வந்ததில்ல,அவனிடம் சில
குறைகள் இருக்கு,ஆனால் நல்லவன், அவன் உன்ன லவ் பண்ற விஷயத்த உன்கிட்ட சொல்றதுக்கு முன்ன என்கிட்டதான் சொன்னான்,
அவனோட குறைகள் என்ன னு பார்க்காம அப்டியே அவன ஏற்றுக்க கத்துக்கோ காதல் வாழ்க்கை அழகா இருக்கும், எனக்கும் எல்லோரயும்
போல லவ் பண்ண ஆசைதான்,பட் என் அப்பா,அம்மாவோட அன்புக்கு
முன்னால காதல் பெருசா தெரியல,
உன்னோட பிடிவாதத்தால ஒரு நல்ல மனசோட அன்ப இழந்திடாத
இது அட்வைஸ் இல்ல;அவன் மேல இருக்கிற நம்பிக்கைலதான்
உன்கிட்ட பேச வந்தேன்.தவறா இருந்தா sorry. என மலர் பேசி முடித்தாள். சிறிது மௌனத்திற்கு பின்,.. "ச்சே ச்சே தவறுக்கு இடமில்ல. நமக்குள்ள sorry சொல்லிக்கனுமா? அவனபத்தி பேசி எனக்கு சில விஷயங்கள் புரிய வெச்சிட்ட Thanks மா" என சமாதானமான குரலில் பேசினாள் கார்த்திகா.!!
"அகெய்ன் sorry மா நாம இவ்ளோ நேரம் பேசின விஷயத்த எல்லாம் அவனும் கேட்டுட்டுதான் இருந்தான், அவனுக்காக அந்த பாவத்தையும் நானே பண்ணிட்டேன்"என பினிஷிங் டச் கொடுத்து மலர்விழி வில்லத்தனத்தை காட்டிசிரிச்சு கவுத்துட்டா.
ம்.. "உன் மொபைல் ஆன் ல இருக்கு னு தெரியாத அளவு நான் தத்தி இல்ல,நீ கட் பண்ணு நான் கால் பண்றேன் " என கார்த்திகா
சொன்ன போது எனக்கு கண்ண கட்டிச்சு.
அடுத்த சிலநிமிஷங்களிலேயே
"எமன் காலிங்" கார்த்திகாவோட
மொபைல் நம்பர அப்டிதான் Save பண்ணிருக்கேன், "சொல்லுங்க மேம், எனி ப்ராப்ளம் ? என் கேபினுக்கு உடனே வாங்க சார்"
கார்த்திகாவின் குரலில் குறும்பு கொப்பளித்தது," இல்ல மேம் ஒரு சின்ன ஒர்க் இருக்கு " வென நான் கடமை உணர்ச்சியா பேசின போது
" த்தூ வாடா டேய், உனக்கு அவ்ளோதான் மரியாதை " இடையே மலரின் குரல், !!
பவ்யமா கார்த்திகாவோட கேபினுக்குள் நுழைந்து கண்ணுல நன்றிய தேக்கி வெச்சினு மலர்விழிய பார்த்தேன்," த்தூ உன் சென்டிமென்ட் பருப்பெல்லாம் இங்க பாயில் ஆகாது " ன்ற மாதிரி
ஒரு லுக் விட்டு" அவன் மொபைல் ல சிரிப்பழகி னு ஒரு கான்டக்ட் நம்பர் இருக்கு,அந்த நம்பருக்கு அடிக்கடி கால் பண்ணி பேசறான்,sms அனுப்பறான், யாரு அது னு கேளு கார்த்தி? என கோர்த்து விட்டு நமட்டுச்சிரிப்பை உதிர்த்தாள் மலர்...
" யாரு சிரிப்பழகி? அந்த நம்பருக்கு
என் முன்ன கால் பண்ணு" குரலுயர்த்தினாள் கார்த்திகா..
"நீயே கால் பண்ணி பேசு ; பட் கோபப்படாம நிதானமா பேசு" என மொபைலை அவளிடம் கொடுத்து
விட்டு,சிரிப்பை அடக்கி அமைதியாக நின்றேன்.
அவள் கால் பண்ணியதும்," பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை; ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை"
என மலரின் ஃபோனில் ரிங்டோன் ஒலிக்க சத்தமாய் சிரித்து விட்டோம் நானும் மலரும்,,
பொய்யான கோபத்தில் மறுபடியும்
I hate u என்றாள். " நீ வாடா கண்ணா,இவள விட அழகா வேற பொண்ண பார்த்து கரெக்ட் பண்ணிக்கலாம்" கிடைத்த கேப்பில் கலாய்த்த மலரிடம் " உன் கால் ல விழுறேன் இடத்த காலி பண்ணு தாயி" என கும்பிட்ட போது போங்கடா நீங்களும் உங்க காதலும் " உருப்படவே மாட்டீங்கடா வென செல்லமாய் சபித்து நகர்ந்தாள்..
U hate me கார்த்தி? ம்
ம் but I love u என்றேன்...
தழுக்கெனச் சிரித்து செல்லமாக என் தலையில் குட்டி,sorry
டா என்றாள் ,,,,,,,, ம் ம் ம்
- பாலா.