இவ்வுலகில் இணையற்றது எது? எனும் கேள்வியை முன்வைத்தால்
உலகமே ஒன்றாய்த்திரண்டு ஒருமித்த குரலில் ஆனந்தக்கூச்சலிடும் அன்பு தான் என்று.தாய்மை,நட்பு,காதல்,பாசம்
என பலகிளைகளாக விரவிக்கிடந்தாலும் அத்தனைக்கும்
முதல்விதையாக அன்பு மட்டுமே!!
அன்பின் பலம், மிகப்பெரும் பலவீனம்.அது கிடைக்கும் வரை பெரிதாய் ஈடுபாடில்லாமல் அலைகிற மனது, அன்பின் விரல் பற்றி நடக்கும் சிறுபிள்ளையென!!
எல்லா மதமும் போதிக்கின்ற பொதுவான உணர்வு உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்பது.! அன்பற்ற சூழலை யூகித்துப்பார்க்கையில் வெறுமையின் கோரப்பற்களில்
சிக்கிக்கொண்டு தனிமையுடன் போராடும் பயங்கரம் மனதெங்கும் நிழலாடுகிறது!!
அன்பைப்பற்றி சொல்ல வேண்டுமாயின் தாய்மையைப்பற்றி
சொல்லியாக வேண்டும், தாய்மையைப்பற்றி சொல்ல வேண்டுமாயின் இப்பிறவி முழுவதும் சொல்லிக்கொண்டே போகலாம். பெண்களுக்கு தாய்மை
பிறவி குணம். ஆண்களுக்கு?!
ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என அறைகூவலிடுபவர்களும் அன்பாதிக்கத்தின் அருமை அறிந்தவர்கள்தான். அன்பைச்சொல்வதில் கோபம் ஒருவகை, கண்ணீர் ஒரு வகை. பரவலாக அன்பை பெண்கள் கோபத்தால் முன்மொழிந்து கண்ணீரால் வழிமொழிகிறார்கள்.
ஆண்கள் அன்பை முன் மொழிவதும் வழிமொழிவதும் கோபத்தின் வாயிலாக.!!
ஆண்களுக்குள் தாய்மை இல்லாமல் இல்லை. தகப்பனாக,கணவனாக,காதலனாக அதை வெளிக்கொணரும் முயற்சியில் தோல்வியைத்தழுவியே ஆகவேண்டிய நிர்பந்தம். பெண்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள்,அவளைப்புரிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லை என்பது மறுக்கவியலா உண்மை. இருபாலர்களும் ஒருவரையொருவர்
புரிந்து கொள்கையில் அன்பு அவர்கள் வசமாகிறது, புரியாதவர்கள் அன்பின் தேடலுக்கு
வசமாகின்றனர்.!! முதியவர்களின்
காதல் அன்பென்று அறியப்படுமளவு இளைஞர்களின் அன்பு காதலென்று அறியப்படுவதில்லை.எதிர்பால் ஈர்ப்பு,இனக்கவர்ச்சி போன்றவற்றை ஒதுக்கிப்பார்த்தால் ஒவ்வொரு மனதும்அன்பிற்காக ஏங்கி நிற்பது புரியவரும்.காதலும் அன்பின் பிம்பம் தானே?!
சினிமாவிலும் அன்பை முன்நிறுத்தி வெளியாகிற திரைப்படங்கள் காலத்தால் அழியாமல் மனதைச்சுற்றி வட்டமிட்டுக்கொண்டுதான
இருக்கின்றன. உதிரிப்பூக்கள்,மூன்றாம்பிறை,சேது,love phobia, In the mood for love, போன்ற அன்பைச்சுமந்து நிற்கும் எனக்குப்பிடித்தத்திரைப்படங்களின்
வரிசையில் தற்போதைய வரவு
" Aashiqui 2 "
பிரபலமான மேடைப்பாடகன் ராகுல்:், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, உள்ளீடற்று ஹேங்கரில் காற்றாடும் சட்டைபோல் அவனது சுய வாழ்க்கை. அவனது வாழ்வில் தென்றலாய் நுழைகிற ஆரோஹியின் அன்பும் அடிமையாக்கிவிடுகிறது.குடிப்பழக்கத்தின் கொடூரம்,அன்பின் அதீதம் இவ்விரண்டும் ஒன்று சேர்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளச்செய்கிறது!
மனதிற்கு நெருக்கமான அழகான காட்சிகள்நிறைய.உருக வைக்கிற பாடல்கள் என அற்புதமான உணர்வுக்குவியல்!Aashiqui2
ஹிந்திப்படங்களின் தீவிர ரசிகையான தூரத்துச்சொந்த (250கிமீ தூரம் இருக்கும்) தங்கையிடம், "Aashiqui 2" படம் பார்த்தேனெனச் சொல்லும் போதே
அழுதீங்களாண்ணா? வெனக்கேட்ட
அவளிடம் "இல்லியே; ஹீரோயின்
செம அழகு,படமும்,ஸாங்ஸ் எல்லாம் நல்லா இருந்திச்சு" னு சொன்னவுடனே" போயா லூசு"எனத்தொடங்கி,நிறுத்தாமல் திட்டித்தீர்த்தாள்.
அன்பைச்சொல்வதில் திட்டும் ஒருவகை போல!!
வயதாக,வயதாக அன்பின் தேவையும்,தேடலும் அதிகரித்துக்
கொண்டேதானிருக்கிறது. யாரேனும் வார்த்தைகளில் அன்பை, அன்பின் தேடலை முன்வைத்தாலும் முழு ஈடுபாட்டோடு வாசிக்கத்துவங்கிவிடுகிறது மனது!! அப்படி வாசிக்கையில் பிடித்தமானவைகளும்,நிகழ்வுகளும் கூடவே நினைவிற்கு வந்துவிடுகின்றன!!
"தாயின் புடவைத்தலைப்பு வழியாக தெரிந்த உலகு வேண்டும்
- (@ikaruppaiah) இந்த வரிகளின்
வீரியம் உதிரிப்பூக்கள் படத்தையும்
சில நாட்களாக என்னோடு மௌனத்தால் மட்டுமே உரையாடும் அம்மாவிடம் காரணம் கேட்ட போது மௌனத்தையே பதிலாகத்தந்த நிகழ்வை நியாபகப்படுத்துகிறது!! மௌனமும் ஒரு வகை அன்புதான்.
மையிருட்டு வெளி ஒன்றில் மெழுகுவர்த்தி ஒளிதிறக்கும் போதெல்லாம் உன் குறுஞ்செய்தி
வருவதாய் நினைவு! (@karna_sakthi) மனதைத்தொடும்
இந்த வரிகள் In the mood for love
படத்தினை பலமுறை மனதிற்குள்
ஓட்டிச்செல்கிறது, கூடவே
மின் துண்டிக்கப்பட்ட அடர்இருள்
நாளொன்றில் பெய்த மழையின் அழகை அந்த வழி சென்ற பேருந்தின்
விளக்கொளி பிரதிபலித்த காட்சியை
நினைவிலடுக்கி நகர்கிறது.!
எனக்கு அறிவில்லை; உனக்கு அன்பில்லை (@guzhali_) திருக்குறளாய் இரண்டுவரியில் இருமனதின் சூழலை அழகாகச்சொன்ன விதம்,love phobia படத்தையும்,Aashiqui 2
படம்பார்த்த மறுநாள் காலை
வழக்கமாக வாக்கிங் செல்லும்
மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையருகே தனித்து நிற்கும் பனைமரத்தில் அமர்ந்திருக்கும் ஒற்றைக்குயிலின்
சோகத்தையும் மனதின் பரப்பெங்கும் நிரப்பிச்செல்கின்றது!!
" தவறவிட்ட தருணங்களுக்காகத்
தான்,இப்போது தவமிருக்கிறேன்"
(@rm_anitha) இந்த வரிகளின் ஆழத்தில் மூன்றாம்பிறை படத்தில்
தலைவன் கமல்ஹாசனின் கதாபாத்திரம் உள்ளடங்கிக்கிடப்பது
போலொரு பிரமை. மன அழுத்தமானஓர் மாலைவேளையில்
மதுரை ஆண்டாள்புரத்திலிருக்கும்
சாய்பாபா கோவிலில் என்னையறியால் பல மணிநேரம் உட்கார்ந்திருந்த நிகழ்வை அப்பட்டமாக கண் முன் நிறுத்தியது
மேற்சொன்ன வரிகள்..!!
ஆத்து மீனா அலைஞ்ச மனசு;
ஊத்து நீரா வழியுது வயசு;
சேத்தள்ளி பூசி நின்ன என் ஒடம்பு;
பாத்துப்போன ஒம்பார்வையில பூத்திருச்சு பாதி உசுரு.
சுறுக்குப்பையாட்டம் மனச இறுக்கி முடிஞ்சவளே; ஒம்பின்ன
கிறுக்குப்பிடிச்சு அலையுறனே
குறுக்கு செத்த கோழியாட்டம்!!
கெழுத்தி மீனு கழுத்தப்போல அழுத்திப்புடிச்சும் துள்ளுற..
பழுத்த மொளகா பழ ஒதட்ட
இழுத்துக்கூட்டி மீதி உசுர் அள்ளுவ !!
கூத்துக்கொட்டாயி பின்னால
வேர்த்துச்சொட்ட எம்முன்னால
கூழு கலந்த வெல்லமா ஏழு சென்மம் எணஞ்சிருப்போமின்னு
நாலுகாலு பாய்ச்சலுல சொல்லிப்புட்டு போனவளே..
காத்தணைச்ச கற்பூரமா விட்டுப்போன பாதியில; நாதியத்து
நிக்கிறேன் வீதியில!!
கொல்லப்புறம்,எல்லக்கல்லு,
ஒட்டுத்திண்ண,சிட்டுக்குருவி,
வெட்டுக்கிளி,எட்டுத்திக்கு
எங்க பாத்தாலும் ஒன் நெனப்பு..
சங்கறுத்த சாவலா துடிக்குதடி
எம் பொழப்பு!!
29ம் முறை சேது படம் பார்த்த நள்ளிரவில் என் மனதும் இப்படி
பிதற்றியது அன்பின் தேடல் தானே?! இதற்கு முன் சந்தித்திராத, பேசியிராத,பழகியிராத அன்புள்ளங்களின் வார்த்தைகள்
என் நினைவுக்குளத்தில் கல்லெறிய ,சலனமற்று கரைமோதும் அலைகளாகிறது மனது!! அன்பு மனது சார்ந்தது
அன்புள்ளங்களை,அன்பின் தேடலை வார்த்தைகளில் முன் வைக்கிறவர்களை அறிவுக்கண் கொண்டு பார்ப்பதில்லை நான்!!
"வாழைமரங்களைப்போலவே வாழ்க்கை மரத்திலும் சம்பவ இலைகள் உதிர்வதே இல்லை" எனும் நா.முத்துக்குமாரின் வரிகள்தான் எவ்வளவு உண்மையானவை?!
- பாலா.
்
்
்
்
்
்
்
்
அருமையான பதிவு தோழர் :)) நன்றி தோழர் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :))
பதிலளிநீக்கு