ஞாயிறு, 8 டிசம்பர், 2013

என் மனதின் ஜன்னலருகில்..

வாழ்க்கை எப்பொழுதும் அழகு.. ரசிக்கத்தெரியாதவர்களுக்கு அவ்வாழ்க்கையைப் போலொரு எதிரி இருக்க வாய்ப்பில்லை..
இன்பங்களைவிட துன்பங்கள் பொதிந்துகிடக்கிறவர்களின் வாழ்க்கையிலும் சிறு சிறு சந்தோஷ தருணங்கள் தான் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைகொள்ளச்செய்கின்றன..

வாழ்க்கையைப்பற்றி எழுத முழுதாய் வாழ்ந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை.கசப்பான அனுபவங்கள் போதுமானதாகிறது; அத்தி பூத்தாற்போல் சில நல்ல அனுபவங்களும் அதன் வரிசையில்

சுவாரசியமற்று தேங்கிக்கிடக்கும்
வாழ்வின் இடைவெளிகளை சில பயணங்கள் சுகானுபவங்களாக்கி
நகர்கின்றன.. பேருந்தின் ஜன்னலோரம் ஓடும் மரங்களைப்
போல!்!!

ஒவ்வொரு முறையும் "என்ன வாழ்க்க டா" என அலுத்துக்கொள்கிற வேளைகளில்
எதிர்பாராமல் மேற்கொள்கிற சிறு பயணங்கள் வாழ்வின் இன்னொரு புதிய வாசலுக்கு விரல் பிடித்து அழைத்துச்செல்கின்றன..

சரியாக அடைக்கப்படாத பொதுக்குழாய்களில் வீணாக வழிந்தோடும் தண்ணீரைப்போல
உதாசீனமான என் வாழ்வின் சிலபகுதிகளை அர்த்தப்படுத்தியது சிறுசிறுபயணங்கள்தான்

கடலைப்போல் ஓரிடத்தில் தேங்கிவிடுவதில் என்ன சுவாரசியம் இருந்து விடப்போகிறது?ஓடும் நதியாக,விழும் அருவியாக வாழ்வை நகர்த்த ஆயத்தமாகி சமீபத்தில்
வழியனுப்ப ஆளில்லா பயணமொன்றை நான் மேற்கொள்ள வழி நெடுக பசுமையின் கையசைப்புகள்;சேருமிடம் தெரியாமல் திக்கற்றலையும் பறவைக்கு இளைப்பாற ஓர் கிளை இடம் தராமலா இருந்து விடும்?  இலக்கற்ற பயணத்தில் நான் இளைப்பாற அமர்ந்தது அழகான
பூமரக்கிளையில்.!!

வாழ்வு தீரும்வரை தீராவலி கொடுத்த ஓர் பிரிவு மனமுடைத்து
கொண்டிருந்த இக்கட்டான தருணத்தில், அறிமுகப்படுத்திக்
கொள்ள புன்னகையை முன் மொழிந்து,அடையாளப்
படுத்திக்கொள்ள அன்பை வழிமொழிகிற இனிய தோழியை
உடன்பிறவா சகோதரியைசந்திக்க நேரும்வாய்ப்பு இந்தப்பயணத்தில்..

நான் ஊருக்கு வந்த செய்தியை குறுந்தகவலனுப்ப,சில நிமிடங்களில் தன் தம்பியை அனுப்பிவைத்து அழைத்துவரச்சொன்ன பேரன்பும்
சகோதரத்துவத்தை உணர்த்தியது!!
அழைத்துப்போக வந்த தம்பி சந்தித்த முதல்நொடியில்  நண்பனாகிப்போனான்.. தயக்கத்துடன் அத்தோழமையின்
வீடேற, வாசலில் நின்று வரவேற்ற
பண்பு, தயக்கத்தை வேரோடு சாய்த்தது,அடுக்களையில்
இருந்தவாறே "வாங்க தம்பி; நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லோரும்
நல்லாஇருக்காங்களா? என்று கேட்ட
வாஞ்சையில் 28 வருடம் பார்த்து பார்த்து வளர்த்த தாயை முதல் சந்திப்பில் முன்நிறுத்தியது அந்த அம்மாவின் பரந்த முகமும், நிறைந்த புன்னகையும்!!

ஏதேதோ பேசிக்கொண்டிருந்த வேளையில் அவர்களின் அப்பாவை
சந்திக்க நண்பன் அழைத்துச்செல்ல
'வா மா, உட்காருங்க, டீ சாப்பிடுங்க
என அடுத்தடுத்து நேசத்தை அடுக்கிய அந்த அப்பாவின் கரம் பற்றி சிறிது தூரம் நடக்கத்தோன்றிற்று .. அலுவலில் ஆழ்ந்திருந்த அவரை தொல்லை
செய்யாமல் விடைபெற்று மறுபடியும் வீடடைந்தோம்..

சாப்பிடச்சொல்லி வற்புறுத்திய போது, நேரமின்மையை காரணம்
காட்டி நழுவ நினைத்த போது
" ஒழுங்கா சாப்பிட்டு போ" என்று
மிரட்டும் தொணியில் பார்வையால்
அனைவரும் கட்டளையிட , அன்பிற்கிணங்கி  சாப்பிடத்தொடங்கினேன், அருகிலமர்ந்து அம்மா பரிமாற,
அவர்களருகே அமர்ந்த மகள் கன்னக்குழிச்சிரிப்பில் அமைதியாய் கதைத்துக்கொண்டிருக்க அளவு தெரியாமல் ரசித்துண்ட பிரியாணியின் ருசியில் மனதும்
வயிறும் ஒரு நிறைந்ததில் பெரும்
மகிழ்ச்சி..!!

பிரியாவிடை பெற்று பிரிய நேர்கையில்; என் கையில் சிறிது பணத்தை திணித்து அனுப்பிய அம்மாவிற்கு காலம் முழுதும்
நன்றிக்கடனடைக்கும் பாக்கியம்
கிடைத்ததை என்னவென்று சொல்வது? கருணையை,அன்பை
தம் அடையாளமாய் வைத்திருக்கிற
மனிதர்கள் உருவில் கடவுள் தன்
இருப்பை உணர்த்திக்கொண்டுதான்
இருக்கிறார்..!!

பஸ் ஏற்றிவிட வந்த நண்பன் பைக்கிலிருந்த பையொன்றை  என்னிடம் தந்து புன்னகைத்து கையசைத்துப்பறந்தான்..
புறப்பட தயாரான நிலையில்
"பஸ் ஏறிட்டியா? பாத்துப்போ!''
வென குறுந்தகவல் சகோதரியான
அத்தோழியிடமிருந்து.. எனக்குள்
நானே புன்னகையித்தவாறு சரி மா யென பதிலனுப்பி ,அமர்ந்திருந்த
இருக்கையின் ஜன்னலின் வெளியே
நோக்க, எங்கிருந்தோ கூட்டமாய்
தரையிறங்கிய கொக்குகள் முழு
வானை புவியில் போர்த்தியமர்ந்த காட்சியின் வியப்பு மீண்டுமொரு
முறை அக்குடும்பத்தினரை மனதில் பதித்துப்பறந்தன!!

குறும்பென்பது சில குழந்தைகள் பிறக்கும் போதே கூடப்பிறந்துவிடுகின்றன.. அக்குறும்பு வளர்ந்து பெரியவர்கள்
ஆனபின்பும் தொடர்வது இன்பமான பேரவஸ்தை.. என்னருகிலமர்ந்த ஓர்
குழந்தையின் புன்னகையும்,குறும்பும் சென்றமுறை பயணத்தில் சந்தித்த மென்பொருள்
நிறுவன மேலதிகாரியான ஓர் அக்காவை நினைவூட்டின இந்தப்பயணத்தில்..
உண்ட மயக்கம் தொண்டருக்கு மட்டுமல்ல,என்போல் குண்டர்களுக்கும் உண்டென்பது
போல் லேசாக கண்ணயர " காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்; கரையுது எம்மனசு உன்னால" என்று யாருடைய செல்போன் அலறியதென உத்தேசித்த நொடிப்பொழுதில் ஓர் முறை மட்டும் அலைபேசிய அயல்நாட்டில் வசிக்கும் மருத்துவ
சகோதரியை நியாபகப்படுத்தியது
அந்தப்பாடல்.. இப்படி ஒருபயணத்தில் பல மனிதர்களின்
நினைவுகள்..

என் பயணத்தில் என்னை சந்தித்தவர்களுக்கு நான் ஹைக்கூ
கவிதை போலத்தான்.. இருவரிகளில் முடிந்து விடலாம்..
நான் சந்தித்த அத்தனை மனிதர்களும் என்னில் தொடர் க(வி)தைகளாக.. பூக்கடையை
கடக்கிற காற்றில் கலந்திருக்கும்
வாசத்தைப்போல் அத்தனைமனிதர்களின் நேசமும்
என் மனதின் ஜன்னலருகே பசுமையான காட்சிகளாக..

என் நிறுத்தத்தில் என்னை இறக்கிப்போன பேருந்தின் பின்னால்
ஓடும் தூசிப்புழுதிச்சுழலாய் சுழன்று கொண்டே.. மெல்ல
நடந்து சைக்கிள் ஸ்டாண்ட் உள்
நுழைய,பண்பலையில் ஒலித்துக்
கொண்டிருந்தது, எல்லோர்
வாழ்வோடும் ஒன்றிப்போகும்
நா.முத்துக்குமார் எழுதிய
"ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடிப்போகாது;மறுநாள்
வந்துவிட்டால் துன்பம் தேயும்
தொடராது" எனும் பாடல்..

வீட்டை நோக்கி எதிர்காற்றில் சைக்கிளை செலுத்த முனைகையில் அருகிலிருந்த
தேவாலயச்சுவற்றில் தென்பட்டது
" நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக்
கைவிடுவதுமில்லை" எனும் வாசகம்..

வாழ்க்கை எப்பொழுதும் அழகு !!!
           
                           - பாலா .


1 கருத்து:

  1. *பூக்கடையை
    கடக்கிற காற்றில் கலந்திருக்கும்
    வாசத்தைப்போல் அத்தனைமனிதர்களின் நேசமும்
    என் மனதின் ஜன்னலருகே பசுமையான காட்சிகளாக..

    *எங்கிருந்தோ கூட்டமாய்
    தரையிறங்கிய கொக்குகள் முழு
    வானை புவியில் போர்த்தியமர்ந்த காட்சியின் வியப்பு

    *குறும்பென்பது சில குழந்தைகள் பிறக்கும் போதே கூடப்பிறந்துவிடுகின்றன.. அக்குறும்பு வளர்ந்து பெரியவர்கள்
    ஆனபின்பும் தொடர்வது இன்பமான பேரவஸ்தை..

    பிரமாதம் பாலா.....
    வாழ்க்கை எப்போதும் அழகுதான்

    பதிலளிநீக்கு